Description
‘..ஒழுகினசேரியின் நீண்ட சுடுகாட்டில் வரிசையாய் சாதிக்கு ஒரு எரிக்குழி. எட்டு அடியில் மண் பீடமாய் நிற்கும் மாசாண சுடலை தான் மொத்த பொறுப்பு. குழியில் சாந்து நிரப்பி உள்ளே எரியும் வைக்கோல் நின்று எரிய வசதியாய் சாந்தின் மேல் தலைமாட்டில், நெஞ்சு, கால்மாட்டில் சிறிதாய் மூன்று கையளவு குழியிட்டனர். அத்தான் மொட்டை போட போகவும், நான் பழையாற்றில் இறங்கி முங்கியெழுந்து படித்துறையில் ஏற, மணி அண்ணன் ஓல்ட் கிங்ஸ் ரம் பாட்டிலை இடப்புறமிருந்த மின்மயான மேடையில் அமர்ந்தபடி திறந்து கொண்டிருந்தான். ரம்மின் வாடை படித்துறையில் ஏறிய எனக்கே மூக்கை அடைத்தது. “என்னா மணி.. இப்போவே ஓட்டம் பாக்கியா. அடுத்த குழி உனக்குத்தான் போல” ஆற்றில் இருந்து ஒரு குரல் கேட்டது. மணி அண்ணன் இதையெல்லாம் கவனிக்கவில்லை. “குடில என்னையா கணக்கு மயிரு.. நா என் மேலு வலிக்காக்கும் குடிக்கேன். சங்கடம் உள்ள வாழ்க்கை உனக்குண்டா. எங்க அய்யா இருந்தத அழிச்சான். நா ரெண்டு பொட்டப் பிள்ளையை பெத்து கஷ்டப்படுகேன். எவனாச்சும் சொக்காரன், அவன் இவன்னு உபகாரம் உண்டா. எம்பைசா, எம் பொண்டாட்டி பிள்ளைகளுக்கு. பெயிண்ட் அடிச்சு இருக்கிறீரா? ஆக்கர் லோடு தூக்கும் போது மூட்ட ஒவ்வொண்ணும் நூறு கிலோ இருக்கும். எழவு இந்த நேரத்துல உன் உபதேசம் ஒன்னுத்துக்கும் புடுங்க லாயக்கு இல்ல. நீரு நல்லவனா இரய்யா. மனசுல ஆயிரம் விஷயம் கிடந்து கீலு கணக்கா கொதிக்கும். குடிச்சா கொஞ்சம் உறங்குவேன்” அண்ணன் என்றோ ஊர் பெரியவரிடம் உதிர்த்த சொற்கள் நினைவில் வந்தன..’
– சிறுகதையிலிருந்து
Reviews
There are no reviews yet.